

செங்குன்றம்:
சென்னை தியாகராயநகர் வெங்கட்டராமன் சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர், சோழவரம் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த குடோனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் காரில் சோழவரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செம்புலிவரம் கிராமம் அருகே உள்ள ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டார்.
பின்னர் காரில் ஏற வந்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கார் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் காசோலைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சோழவரம் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.