ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடான் முழுவதும் கலவரம் - 18 பேர் சுட்டுக்கொலை

சூடான் தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது.
சூடான் கலவரம்
சூடான் கலவரம்
Published on

கார்ட்டூம்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

அதன்பிறகு ராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய ஆட்சியை அமைத்தது. அதன் பிரதமராக அப்துல்லா காம்டோக் இருந்து வந்தார்.

கடந்த மாதம் 25-ந்தேதி அந்த அரசையும் ராணுவம் கலைத்தது. நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு சூடான் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது. ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்ட்டூம், கசாலா, டோங்கோலா, வாட்மடானி, ஜெனினா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.

இதனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிரிழந்தனர். ராணுவத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பல இடங்களிலும் கலவரம் நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com