காங்கிரஸ் ஆட்சியால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை- ரங்கசாமி ஆவேசம்

காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியை விட்டு தானாக விலகி சென்றுள்ளனர். அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடந்துள்ளது என்று ரங்கசாமி கூறியுள்ளார்.
தட்டாஞ்சாவடி பகுதியில் ரங்கசாமி வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
தட்டாஞ்சாவடி பகுதியில் ரங்கசாமி வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தட்டாஞ் சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகரில் 2-வது நாளாக திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த காங்கிரஸ் ஆட்சியால் மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை. நாராயணசாமி திறமையில்லாமல் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் புதுச்சேரியின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டுக்கான நிதியைக்கூட தரவில்லை.

ஒரே ஒரு தார் சாலைகூட போடவில்லை. உட்புற நகர் பகுதியில்தான் இந்த நிலை என்றால் முக்கிய சாலைகளும் போடப்படவில்லை. இதனால் மக்கள் சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் பென்சன்கூட உயர்த்தப்படவில்லை ஆண்டுக்கு ரூ.100 உயர்த்தி இருந்தால்கூட ரூ.500 கூடுதலாக கிடைத்திருக்கும். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.20 செலவுக்கு தேவைப்படும். அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நாங்கள் கடந்த காலத்தில் நிதியை உயர்த்தி வழங்கினோம்.

காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியை விட்டு தானாக விலகி சென்றுள்ளனர். அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடந்துள்ளது. மக்களில் ஒருவருக்குக்கூட வேலைவாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமா ஏற்கனவே வேலையில் இருந்தவர்களையும் வேலையைவிட்டு தூக்கினார்கள். புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை. அந்த தொழிற்சாலைகளை எப்படி கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னர் எப்படி வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நமது ஆட்சிவரவேண்டும்.

அதற்கு அந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான்தான் முதல்-அமைச்சராக வருவேன். கூட்டணி தலைமையும் நாம்தான். இதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாம் ஆட்சிக்கு வந்ததும் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவோம். வேலைவாய்ப்பினை பெருக்குவோம்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com