தொடர்ந்து 4 நாட்களாக மழை: சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க முடியாமல் தாங்கள் தங்கியிருக்கும் லாட்ஜ் அறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்
கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகுதியில் கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானம் மழை மேகத்துடன் காட்சியளிப்பதால் சூரிய வெளிச்சத்தை காண முடியவில்லை.

தொடர் மழையினால் கன்னியாகுமரியில் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியும், மாலையில் சூரியன் மறையும் காட்சியும் கடந்த 4 நாட்களாக தெரியவில்லை. தொடர்ந்து மழை பெய்வதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது.

மேலும் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க முடியாமல் தாங்கள் தங்கியிருக்கும் லாட்ஜ் அறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலை, கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் வட்டக்கோட்டை பீச், மியூசியம், அரசு அருங் காட்சியகம், மீன்காட்சி சாலை, நீர் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, தமிழன்னை பூங்கா, திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

கன்னியாகுமரியில்உள்ள முக்கிய சாலைகளும்ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் இல்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை நீடிப்பதால் பகவதி அம்மன் கோவில் மற்றும் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் பக்தர்கள் கூட்டம் குறையத்தொடங்கி உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com