விதிமுறைகளின்படியே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை- ஜிப்மர் மருத்துவமனை விளக்கம்

விதிமுறைகளின்படியே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை
Published on

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதிக்கு புதுச்சேரி அரசின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சமீபத்திய இருப்பிட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இதற்கு முன் இருந்த அதே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து விவரங்களும் ஜிப்மர் வலைதள பதிவில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்படுகிறது. ஜிப்மர் உள்ளீட்டுக்கான முன்னுரிமை என்ற மருத்துவ கலந்தாலோசனை குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ள தொகுப்பு புதுச்சேரி இருப்பிடத்தின் அடிப்படையிலான முன்னுரிமையே ஆகும்.

இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர் மட்டும் இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஜிப்மர் வலைதள பகுதியில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறையின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். எனப்படும் இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜிப்மர் முதல்வருக்கு கலெக்டர் அலுவலக தனி அதிகாரி சுரேஷ்ராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட தரவரிசை பட்டியலை இந்திய மருத்துவ கல்வி ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுவை பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

எனவே புதுவை மாணவர்களுக்கான இடத்தை பெற்றிருக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை சேர்க்கைக்கு முன்பாக ஆய்வு செய்யவேண்டும். இதில் எந்த விதிமீறலும் இருக்கக் கூடாது. புதுவை வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்த பின்னரே சேர்க்கை வழங்கவேண்டும்.

புதுவை இடஒதுக்கீடு கேட்டு தற்போது இடஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் நகல்களை அதன் உண்மை தன்மை குறித்து அறிய சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com