

குளித்தலை:
குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடங்களுக்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 8 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்ததோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல குளித்தலை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது கடைகளில் வைத்து விற்பனை செய்த 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களையும் கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியில் மது விற்றதாக நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் (50), புன்னம்சத்திரம்- வேலாயுதம்பாளையம் சாலையில் மது விற்றுக்கொண்டிருந்த ரங்கன் (55) என்பவரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
தோகைமலை அருகே உள்ள ஊமைஉடையானூர் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், தோகைமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (50), முருகேசன் (45) ஆகியோர் தனித்தனியாக அவரவர் பெட்டிக்கடைகளில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.