கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி- மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்

கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

சிக்கல்:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com