

கரூர்:
கரூர் அருகே உள்ள வெங்கமேடு ஜீவா நகர் பகுதியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த சிறிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த உண்டியலை திருடி பையில் போட்டு கொண்டு வெளியே வந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவகிருஷ்ணன் (வயது 19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிந்து, சிவகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரிடமிருந்த உண்டியல், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.