அவினாசி அருகே இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி படுகொலை

அவினாசி அருகே இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

சேவூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடியிருப்பு கட்டுமான பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்குவதற்காக அந்த புதிய குடியிருப்பு கட்டும் இடத்திலேயே ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தசொமார்டி (வயது 44) என்பவரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலையின் பின் பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தசொமார்டி நேற்று காலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தசொமார்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து தசொமார்டியை அடித்து கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்று அவருடன் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com