

மதுரை:
ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்காக ரெயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. வழக்கமாக முன்பதிவு மையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு, ரத்து ஆகியன செய்ய முடியும். இரவு 8 மணிக்கு பின்னர் உடனடி முன்பதிவு கவுண்டர் மட்டும் செயல்படும்.
இதுதவிர ஆன்லைனில் 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு மையங்களை பொறுத்தமட்டில், வருடத்துக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இந்த நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு மையங்கள் திறந்திருக்கும். பின்னர் இரவு 8 மணி வரை முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி மட்டும் இருக்கும்.
இந்தநிலையில், நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை தொடர்ந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களும் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட்டன. ஆனால், மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மட்டும் இரவு 8 மணி வரை விதியை மீறி செயல்பட்டது. இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் லெனின் கூறியதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களும் நேற்று மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முன்பதிவு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் மதியம் 2 மணிக்கு பின்னர் முன்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள், டிக்கெட் ஏஜெண்டுகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு பின்னர் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே நடைமுறையில் நேற்றும் முன்பதிவு மையம் திறந்திருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து விட்டது. இதனால், முன்பதிவு மைய கிளார்க்குக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாகி விட்டது என்றனர்.