

அரகண்டநல்லூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கச்சிக்குப்பம் கிராமத்தில் கனமழையின் காரணமாக சக்திவேல் என்பவரது வீட்டின் சுவர் நனைந்து இருந்தது. இதனை அறியாத சுவற்றின் அருகே சக்திவேலின் 1½ வயது வயது பெண் குழந்தை சரண்யா விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது வீட்டு சுவர் சரண்யாவின் மீது திடீரென விழுந்தது. இதில் சுவற்றின் அடியில் சிக்கிய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டனர். பலத்த காயம் அடைந்த குழந்தையை திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதகடிப்பட்டு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சரண்யா இறந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.