யானைகள் நலவாழ்வு முகாம் 8-ந் தேதி தொடக்கம்

யானைகள் நலவாழ்வு முகாம் வருகிற 8-ந்தேதி தொடங்குவதையொட்டி 7-ந் தேதி அதிகாலை முதலே தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து யானைகள் முகாமிற்கு வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகள் (கோப்புப்படம்)
நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகள் (கோப்புப்படம்)
Published on

மேட்டுப்பாளையம்:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு 13-வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி முகாமிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்படுகிறது. முகாம் வளாகத்தில் மற்றும் முகாமை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், அடர்ந்த புதர்கள் ஜே.சி.பி மற்றும் டோசர் எந்திரங்கள் மூலம் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

முகாமில் சமையல் கூடம் மற்றும் உணவருந்தும் இடத்திற்காக தகர சீட்டுகளால் கொட்டகை (ஷெட்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் விளக்குகள் மற்றும் மின்பணி அமைப்பதற்கான ஜெனரேட்டர் மற்றும் பொருட்கள் வரவழைக்கப்பட்டு மின் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள ‌ஷவர் மற்றும் குளியல் மேடைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

காட்டு யானைகள் முகாமிற்குள் புகுந்துவிடுவதைத் தடுக்க முகாமை சுற்றிலும் நிலம் மட்டம் மற்றும் தொங்கும் மின் வேலிகள் மற்றும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிய முகாமையொட்டி கண்காணிப்பு கோபுரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

வருகிற 8-ந்தேதி முகாம் தொடங்குவதையொட்டி வருகிற 7-ந் தேதி அதிகாலை முதலே தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து யானைகள் முகாமிற்கு வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு செல்லும் யானைகள் அனைத்தும் தத்தம் புறப்படும் இடத்தில் இருந்து முகாம் தூரத்தினை கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் புறப்பட்டு 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்குள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்து சேரவேண்டும்.

முகாமின் தொடக்க விழா வருகிற 8-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடு பணிகள் கோவை இந்து சமைய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் மேற்பார்வையில் முழு வீச்சிலும், போர்க்கால அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com