

வடவள்ளி:
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45). இவர் நரசீபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார்.
நேற்று இரவு கோவிலுக்கு சென்ற கார்த்தி பச்சாவயல்பதி என்ற இடத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான ஆத்தூர் என்ற கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பள்ளத்தை கார்த்திக் கடக்கும்போது அங்கிருந்த யானை அவரை விரட்டதொடங்கியது. இதைப்பார்த்த கார்த்திக் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் யானை விடாமல் விரட்டி துதிக்கையால் கார்த்திக்கை பிடித்தது. பின்னர் துதிக்கையில் சிக்கிய அவரை சுழற்றி தரையில் ஓங்கி ஓங்கி அடித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிபோது அவரது வயிற்றில் யானை மிதித்து நசுக்கியது. இதில் அவரது குடல் வெளியே சரிந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே கார்த்திக் துடிதுடித்து பலியானார்.
இன்று காலை தோட்டவேலைக்கு சென்றவர்கள் கார்த்திக் கோரமாக உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வனத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குடல்சரிந்து பலியாகி கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசாரும் விசாரணை நடத்தினர்.