

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 400 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-425, ஐதராபாத்-371, விஜயவாடா-391, மைசூரு-426, மும்பை-428, பெங்களூரு-420, கொல்கத்தா-442, டெல்லி-397.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.113 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
கோழிகளுக்கான தீவன மூலப்பொருளான சோயா விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த 4 நாட்களில் லட்சக்கணக்கான கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்து உள்ளது.
மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சோயாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.