

நெல்லை:
நெல்லை டவுனில் அக்கசாலை விநாயகர் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன்பு நிறுத்தி செல்வது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் இரவு நேரங்களில் பெட்ரோல் திருட்டு போய் வந்தது.
கடந்த ஒரு மாதமாக இதேபோல் அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவை குடியிருப்பு வாசிகள் ஆய்வு செய்து பார்த்த போது சிறுவர்கள் சிலர் தினமும் நள்ளிரவு அந்த தெருவிற்கு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோலை திருடுவது தெரியவந்தது.
மேலும் சிறுவன் ஒருவன் அந்த தெருவில் ஆட்கள் யாரேனும் வருகிறார்களா என்பதை நோட்டமிடுவதும், மற்றொருவன் முககவசம் அணிந்து கொண்டு பெட்ரோலை திருடுவதும் கேமிராவில் பதிவாகி உள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.