இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? முன்னாள் இந்திய வீரர்களை அணுகும் கிரிக்கெட் வாரியம்

முன்னாள் இந்திய வீரர்கள் 2 பேரை புதிய பயிற்சியாளராக இருக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்தில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் உள்ளார்.

இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் கேப்டன் கும்ப்ளே, முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை கிரிக்கெட் வாரியம் அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியாளராக இருக்குமாறு இருவரிடமும் கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

இதில் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து உள்ளார். விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரால் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க முடியவில்லை.

வி.வி.எஸ். லட்சுமணன் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து உள்ளார். இருவருமே 100 டெஸ்டுக்கு மேல் விளையாடி உள்ளனர். நல்ல அனுபவம் வாய்ந்த இவர்கள் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

வெளிநாட்டை சேர்ந்தவரை பயிற்சியாளராக நியமிப்பது என்பது 2-வது கட்ட கருத்தாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com