

அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது திரைப்படங்கள் தற்போதும் சினிமா ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகர் திலகம் 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி 74 வயதில் காலமானார்.
அவரது மரணம் அப்போது இந்திய சினிமாத்துறை முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தமிழ் சினிமாவை சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப்பின் என பிரித்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். சிவாஜி கணேசன் தன்னுடைய நடிப்பின் மூலமாக பல கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர்.
அவர் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடி காத்த குமரன், பகத்சிங், ராஜராஜ சோழன் போன்ற எண்ணற்ற வரலாற்று படங்களில் அந்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்.
அந்த கதாபாத்திரங்களை நாம் நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவற்றை தத்ரூபமாக திரையில் தன்னுடைய நடிப்பால் கொண்டு வந்திருப்பார்.
இன்று சிவாஜி கணேசனின் 20-வது நினைவு தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி அவரை பற்றி பதிவிட்டு வருகின்றனர்.
அவரது சாதனைகளை பேசும் வகையில் அதிகம் பேர் பதிவிட்டு வருகின்றனர். சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் இன்று காலை சிவாஜி மணிமண்டபத்தில் அமைந்துள்ளதன் தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இளைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் ஊரில் இல்லாததால் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜி கணேசனை நினைவுகூரும் வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் டுவிட்டரில் அவரை பற்றி உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு சிவாஜியின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துள்ளார்.