தரையிறங்கும்போது விமானம் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் - 3 பேர் காயம்

கொல்கத்தாவில் விமானம் தரையிறங்கும் முன் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

கொல்கத்தா:

விமானங்கள் பறக்கும்போது பல்வேறு காரணங்களால் திடீரென குலுங்கும். இதனால் விமானம் வேகமாக ஆடும், குலுக்கல் ஏற்படும். வானிலை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகளால் இதுபோன்ற நிகழ்வு ஏற்படும்.

இந்நிலையில், மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற போயிங் 737 வகை விஸ்தாரா விமானத்தில் 113 பயணிகள் பயணம் செய்தனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அந்த விமானம் திடீரென குலுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 3 பேர் காயமடைந்தனர்.

விமானம் வேகமாக குலுங்கியதால் விபத்துக்கு உள்ளாகிவிடுமோ என பயணிகள் அச்சத்தில் மூழ்கினர். ஆனாலும் எந்த சேதாரமும் இன்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என விஸ்தாரா விமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com