திருவேங்கடம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுமி பலி

திருவேங்கடம் அருகே பூப்பறிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
மரணம்
மரணம்
Published on

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மேல ரெங்கையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவரது மனைவி கவிமதி (38), மூத்த மகள் விஷ்ணு லட்சுமி (10). இவள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் விஷ்ணு லட்சுமி தனது பெற்றோருடன் வீட்டின் அருகே உள்ள பூந்தோட்டத்தில் பூப்பறிக்க சென்றாள்.

பூக்களை பறித்து விட்டு அருகில் உள்ள தரைமட்ட கிணற்றில் கை, கால்களை கழுவி விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றாள். கை, கால்களை கிணற்றில் கழுவிக் கொண்டு இருக்கும் போது கால் தவறி விஷ்ணுலட்சுமி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினாள்.

வெகு நேரம் ஆகியும் மகள் திரும்பி வராததால் கிணற்றின் பகுதிக்கு பெற்றோர் சென்று தேடினார்கள். தண்ணீரில் விஷ்ணு லட்சுமியின் காலணி மட்டும் கிடந்தது. இதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் கிணற்றில் 45 அடி ஆழத்திற்கு அதிகமாக தண்ணீர் இருந்தது. இதனால் 3 மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் தண்ணீர் 3 அடிக்கு மேல் குறையவில்லை.

இதையடுத்து குருவிகுளம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஷ்ணு லட்சுமி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவளது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவேங்கடம் அருகே பூப்பறிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com