

புதுடெல்லி:
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிரா சிரா என்ற பெண் தனது ஒரு வயது மகளுக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ விசாவிற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் விசா கிடைக்க தாமதமானதால் அவர் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் உதவியை நாடினார்.
அவரின் டுவிட்டிற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், குழந்தைக்கு கண்டிப்பாக மருத்துவ விசா வழங்குவதாக உறுதியளித்தார்.
இதற்கிடையில், ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி இவாங்கிலின் தனது வங்கி கணக்கு லாக் ஆனதால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து உள்ளார். அதனை கண்ட பொதுமக்களில் ஒருவர் போலீசிற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் இவாங்கிலினுக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்குள்ள ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜூன் கவனத்திற்கு தெரியவந்தது. அவர் இவாங்கிலினுக்கு உதவி செய்வதாக டுவிட் செய்துள்ளார். அதில், 'ரஷ்யா எங்கள் நட்பு நாடு. சென்னையில் உள்ள எங்கள் அதிகாரிகள் உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்கள்' என தெரிவித்தார்.