கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி

காந்திஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் நேற்று அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த அபூர்வ நிகழ்வை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுவதை காணலாம்
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுவதை காணலாம்
Published on

கன்னியாகுமரி:

மகாத்மா காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி டெல்லியில் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டு கங்கை, காவிரி, யமுனா உள்பட பல புண்ணிய நதிகளில் கரைக்கப்பட்டது. அதன்படி ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி கன்னியாகுமரி கடற்கரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைநினைவு கூறும் வகையில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட அதே இடத்தில் காந்தி நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் மாதம் 2-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று மதியம் 12 மணிக்கு காந்தி அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த ஒளி விழுவதை அனைவருக்கும் தெளிவாக தெரியும்படி மண்டப ஊழியர்கள் 2 பேர் ஒரு வெள்ளைத் துணியில் பிடித்து காண்பித்தனர். மதியம் 12 மணி முதல் 12.20 மணி வரை அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. அப்போது தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன.

காந்தி மண்டபத்தில் விழுந்த இந்த ஆபூர்வ சூரிய ஒளியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஜாண்தங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட பொருளாளர் சுந்தர்சிங் உள்பட பலர் பார்வையிட்டனர்.

கொரோனா ஊரடங்கினால் இந்த அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. காந்தி மண்டபத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழுந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com