

இந்தியாவின் தென்கோடி முனை கன்னியாகுமரி. இங்கு தினமும் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் அழகையும் காண கண்கோடி வேண்டும்.
இந்த அற்புத காட்சியை காண தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். 2 நாட்களாவது கன்னியாகுமரியில் தங்கி இருந்து இயற்கையின் அழகை ரசித்து செல்வார்கள்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.
சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் கன்னியாகுமரி கடலில் இன்னொரு அற்புத நிகழ்வும் நடக்கும். அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மறுபுறம் சந்திரன் உதயமாகும். ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த காட்சி உலகில் கன்னியாகுமரியை தவிர்த்து ஆப்பிரிக்க காட்டு பகுதிக்கு நடைபெறும்.
ஆப்பிரிக்க காடுகளுக்கு மக்கள் பெருமளவில் செல்ல முடியாது என்பதால் கன்னியாகுமரிக்கு வந்து இந்த அற்புத காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
மாலை மயங்கி இரவு தொடங்கிய 6.15 மணிக்கு அரபிக்கடல் பகுதியில் சூரியன் மெல்ல மெல்ல அஸ்தமிக்க தொடங்கினான். அப்போது கிழக்கு பக்கம் வங்கக்கடல் பகுதியில் இருந்து முழு நிலவு மேலே எழும்ப தொடங்கியது.
ஒரே நேரத்தில் நிகழ்ந்த இக்காட்சியை ஏராளமான பயணிகள், குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரையில் அவர்கள் குவிந்திருந்தனர்.
இதையொட்டி நேற்று கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி. வேணுகோபால் தலைமையில் போலீசார் கடற்கரையில் ரோந்து சுற்றி வந்தனர்.