

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ளது ப.வில்லியனூர் கிராமம். இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் மற்றும் சலூன் கடைகளின் பின்புறம் சிலர் அனுமதியின்றி பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் சாராயத்தை வாங்கி குடிக்கும் குடிபிரியர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி-கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ப.வில்லியனூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சாராய பாக்கெட்டுகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாணவர்களை கலெக்டர் சுப்பிரமணியத்திடம் அழைத்து சென்றனர்.
ப.வில்லியனூர் பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைத்து சாராயம் விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.