

குளச்சல்:
குளச்சலை அடுத்த வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(வயது23). தொழிலாளி.
இதே பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின்(21). கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். ஷெரினுக்கும், ஆகாசுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதல் இருந்து வந்தது.
இந்த தகவல் ஷெரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஷெரினுக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்தனர்.
வீட்டில் திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து ஷெரின் மனம் உடைந்தார். இது பற்றி காதலன் ஆகாசுக்கு தெரிவித்தார். இருவரும் நேற்று மாலை குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அங்கிருந்த போலீசாரிடம் இருவரும் காதலித்து வருவதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் போலீஸ் நிலையம் வந்ததாகவும், தெரிவித்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். ஆகாஷ்- ஷெரின் இருவரின் பெற்றோரும் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.