

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை கடந்த 7-ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார்.
அவருடன் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பயணம் கடலூரில் இன்று நிறைவடைந்தது. கடலூர் வந்தடைந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோல், அரியலூர் மாவட்டத்தில் இருந்து மற்றொரு குழுவினரும் தங்கள் நடைபயணத்தை தொடங்கினர். இந்த 2 குழுவும் இன்று வியாழக்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வந்தடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் ஸ்டாலின் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். காவிரிக்காக பயணம் செல்கிறேன் என்றதும் கருணாநிதி கையை தூக்கி வாழ்த்து தெரிவித்தார் என தெரிவித்தார்.
இதற்கிடையே, காவிரி உரிமை மீட்பு பயணத்தை நிறுத்துமாறு மு.க.ஸ்டாலினுக்கு சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. சேகர் சம்மன் வழங்கினார். ஆனால் அதை வாங்க ஸ்டாலின் மறுத்து விட்டார்.