

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
அதைத் தொடர்ந்து தனது 74-வது பிறந்த நாளையொட்டி கொழும்பு நகரில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டு விட்டு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்தால் நல்லது. ஏற்கனவே கேபினட் மந்திரிகள் பலரும் பதவி விலகி உள்ளனர். அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் என கூறினார்.