என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பை: 4-வது வெற்றி ஆர்வத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்துடன் இன்று மோதல்
- வங்கதேச அணி 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
விசாகப்பட்டினம்:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
நேற்றுடன் 16 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் தலா 7 புள்ளிகள் பெற்றுள்ளன. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளியுடனும் (3 வெற்றி,1 தோல்வி), இந்தியா 4 புள்ளியுடனும் (2 வெற்றி, 2 தோல்வி) உள்ளன. நியூசிலாந்து (3 புள்ளி), வங்காளதேசம், இலங்கை (தலா 2 புள்ளி), பாகிஸ்தான் (1 புள்ளி) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
இந்த போட்டி தொடரின் 17-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது.
அந்த அணி தொடக்க போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கையுடன் மோதிய 2-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது போட்டியில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இங்கிலாந்து (4 விக்கெட்), நியூசிலாந்து (100 ரன்), தென்ஆப்பிரிக்கா (3 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் மோதி இருந்த 4 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.






