search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய கோப்பை போட்டியிலும் புதிய யுக்தியை கையாள்வோம்- இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்
    X

    ஆசிய கோப்பை போட்டியிலும் புதிய யுக்தியை கையாள்வோம்- இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்

    • ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம்.
    • கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம்.

    சென்னை:

    ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந் தேதி) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    இந்த போட்டியில் பங்கேற்க மலேசியா, தென் கொரியா, ஜப்பான் அணிகள் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஸ்பெயினில் நடந்த 4 நாடுகள் போட்டியில் கலந்து கொண்ட ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்தது. விமான நிலையத்தில் இந்திய அணியினருக்கு ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியினர் சொகுசு பஸ் மூலம் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணி நேற்று காலை வாகா எல்லை வழியாக பஞ்சாப்பை வந்தடைந்தது. பின்னர் அமிர்தசரஸ் சென்ற பாகிஸ்தான் அணியினர் விமானம் மூலம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சீன அணி நள்ளிரவில் வந்தடைந்தது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சமீபத்தில் நடந்த போட்டிகளில் எங்களது ஆட்டத்தில் சில யுக்தியை மாற்றி விளையாடினோம். தற்போது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் அத்தகைய யுக்தி மாற்றத்தை அமல்படுத்த இருக்கிறோம்.

    ஸ்பெயினில் முடிவடைந்த 4 நாடுகள் போட்டியில் சிறப்பாக ஆடினோம். கடந்த 10 நாட்களில் சில மிகச் சிறந்த அணிகளை சந்தித்துடன் அவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டோம். வருகிற ஆசிய விளையாட்டுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை அடித்தளமாக பயன்படுத்தி கொள்வோம்.

    ஆசிய விளையாட்டு நெருங்கும் சமயத்தில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் எங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இது போன்ற ஆட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த போட்டியில் விளையாடுவது முக்கியமானதாகும். அதிலும் சொந்த மண்ணில் நடப்பது இன்னும் சிறப்பானது' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×