

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தென் தமிழகத்தில் மிகப் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. சுற்று வட்டார கிராமங்களான இடைய கோட்டை, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, விருப்பாச்சி, மூலசத்திரம், சத்திரப்பட்டி பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து அதிக அளவு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கேரள வியாபாரிகள் மைசூர் சந்தைக்கு சென்று வருவதால் ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டில் வெங்காயங்கள் தேங்கியுள்ளது. மேலும் வரத்தும் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மாதம் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 வரை விலை போனது. ஆனால் தற்போது ரூ.13-க்கே விலை கேட்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் பல்லாரி வெங்காயம் ஆந்திரா மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த வெங்காயம் 1 கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துளளனர். பராமரிப்பு செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை என்பதால் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் காய்கறிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.