

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்தவர் சசீந்திரன். சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஒரு இளம்பெண் உதவிகேட்டு வந்தார். பிறகு அந்த பெண் போனில் மந்திரி சசீந்திரனிடம் பேசிய போது அவர் ஆபாசமாக பேசி உள்ளார். இதை பதிவு செய்து ஒரு மலையாள டெலிவிஷனில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் தனது மந்திரி பதவியை சசீந்திரன் ராஜினாமா செய்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மலையாள டெலிவிஷன் பெண் நிருபர் ஒருவர்தான் சசீந்திரனிடம் உதவி கேட்பது போல போனில் பேசியதும் அவரிடம் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து டெலிவிஷனில் ஒளி பரப்பியதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த பெண் நிருபர் உள்பட டெலிவிஷன் நிறுவனத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது முன்னாள் மந்திரி சசீந்திரன் தன்னிடம் டெலிபோனில் ஆபாசமாக பேசியதுபற்றி அந்த பெண் நிருபர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து சசீந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.