search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- தடைகளை விலக்கும் நந்தி தேவர்!
    X

    ஆன்மிக அமுதம்- தடைகளை விலக்கும் நந்தி தேவர்!

    • வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம்.
    • நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார்.

    சிவபெருமானின் வாகனம் நந்தி. அவர் பக்தர்களால் நந்திதேவர் எனத் தனிக் கடவுளாகவும் போற்றப்படுகிறார். சிவனை நோக்கியபடி சிவாலயங்களில் நந்திதேவர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

    ராவணனுக்கு நந்தியின் சாபம் இருந்தது. அதனாலேயே அவன் அழிந்தான்.

    தன் வழிபடு கடவுளான சிவபெருமானை அவர் வீற்றிருக்கும் இமயமலையோடு பெயர்த்து எடுத்துச் செல்ல முயன்றான் அவன். அப்படிச்செய்வது தகாது என நந்தியம்பெருமான் ராவணனுக்கு அறிவுறுத்தினார்.

    அந்த அறிவுரையைக் கேட்காத ராவணன் நந்தியைக் குரங்கு முகம் கொண்டவன் எனக் கேலி பேசினான். கடும் சீற்றம் கொண்டார் நந்தி தேவர்.

    `என்னைக் குரங்கோடு ஒப்பிட்ட நீ குரங்குகளையே எதிரிகளாகப் பெற்று குரங்குகளாலேயே அழிவாய்` எனச் சாபமிட்டார்.

    அதன்படி சுக்கிரீவன் தலைமையில் சீதையை மீட்பதற்காக ராம லட்சுமணர்களோடு எண்ணற்ற குரங்குகள் வந்து போரிட்டதையும் சுக்கிரீவன் என்ற குரங்கு ராவணன் மூக்கைக் கடித்ததையும் ராம ராவண யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டதையும் ராமாயணம் பேசுகிறது. பலித்தது நந்தி சாபம்.

    சோழ நாட்டில் ஆதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்தவன் நந்தனார் என்று இன்று போற்றப்படும் நந்தன். புலைப்பாடியில் பிறந்த நந்தன் தீவிர சிவ பக்தனாகவும் விளங்கினான்.

    அவன் ஒருசமயம் அருகேயுள்ள திருப்புன்கூர் கோவிலுக்குச் சென்றான். அங்கே கோவில்கொண்டுள்ள சிவலோக நாதரைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க விழைந்தான்.

    ஆலயப் பிரவேசத்திற்கு அவனைப் போன்றோர்க்கு அருகதை இல்லாத காலம். தேரடியில் நின்றே உள்ளம் உருகும் பக்தியோடு சிவதரிசனம் செய்ய முற்பட்டான்.

    ஆனால் என்ன சங்கடம்! கோவில் வாயிலில் பெரிய நந்தி ஒன்று அவன் சிவனைக் காண இயலாதவாறு வழிமறைத்து நின்றது. `சற்றே இந்த நந்தி விலகாதா, நான் சிவதரிசனம் செய்யும் பேறு பெற மாட்டேனா?' என அவன் உள்ளம் ஏங்கியது.

    அந்த ஏக்கத்தை உணர்ந்தார் சிவலோக நாதர். அவர் தன் வாகனமான நந்தியைப் பார்த்து, `சற்றே விலகியிரும் பிள்ளாய்! நம் சன்னிதானம் மறைக்குதாம்' என்று கூறினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட நந்தியும் நந்தன் தரிசனம் செய்ய வசதியாகச் சற்றே விலகி அமர்ந்தது. இந்தச் சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நந்தன் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் நந்தன் சிவனைப் பார்க்க ஏங்கியதை அழகிய கீர்த்தனையாகப் பாடியுள்ளார்.

    `வழிமறைத்திருக்குதே...மலைபோலே ஒரு

    மாடு படுத்திருக்குதே...

    தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்

    கோவில்வர மாட்டேனே ஐயே...

    ஓரடி விலகினால் போதும் இங்கே நின்று

    உற்றுப் பார்க்கச் சற்றே விலகாதோ மாடு...'

    திருப்புன்கூர் ஆலயத்தில் சிவ சன்னிதியின் முன் சிறிது விலகி அமர்ந்திருக்கும் நந்தியை இப்போதும் தரிசிக்கலாம்.

    வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம். எல்லா ஆலயங்களிலும் நந்தி அமர்ந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் திருவல்லம் ஆலய நந்தி இறைவனுக்குப் புறமுதுகு காட்டியவாறு நின்ற நிலையில் உள்ளது.

    ஒருமுறை இறைவன்மேல் மிகுந்த பக்தி கொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவர், சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வந்தபோது அவரை ஓர் அரக்கன் வழிமறித்துப் பெரும் தொல்லை கொடுத்தான்.

    இது பொறுக்காத அர்ச்சகர் வருத்தத்தோடு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் நந்திக்குக் கண்ஜாடை காட்டினார். நந்திதேவர் உடனடியாக அசுரனை அடித்துத் துரத்தினார்.

    அவன் மறுபடி வருகிறானா எனக் கண்காணிக்கவே நந்தி அந்த ஆலயத்தில் இப்போதும் கூட இறைவனுக்குப் புறமுதுகு காட்டி நிற்பதாகக் கூறப்படுகிறது.

    விருத்தாசலத்திற்கு அருகே உள்ளது பெண்ணாடம் என்ற அழகிய சிற்றூர். இங்குள்ள கோவிலில் கொழுந்தீசராக சிவ பெருமான் காட்சி தருகிறார்.

    ஒருமுறை பெண்ணாடத்தில் பெருமழை பிடித்துக் கொண்டது. ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து பெண்ணாடம் தீவுபோல் ஆகியது.

    மக்கள் எங்கும் செல்ல இயலாமல் வெள்ளப் பெருக்கால் சிறைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஊர்த் தெய்வமான கொழுந்தீசரிடம் மனமுருகி வேண்டினார்கள்.

    கருணை கொண்ட இறைவன் நந்தி தேவரிடம் கட்டளை இடவே நந்தி வெள்ளம் முழுவதையும் பருகி மக்களைக் காப்பாற்றினார்.

    அந்த நாளிலிருந்து நந்தி வெள்ளத்தைப் பருக வசதியாக இக்கோவிலில் வாயிலை நோக்கியபடிதான் வீற்றிருக்கிறார்.

    நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார். திருச்சி போன்ற இடங்களில் பெரிய நந்தி சிலைகள் தனியேயும் காணப்படும்.

    ஆனால் பெங்களூருவில் பசவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு சிறப்பு. இங்கு நந்தியே மூலவராக இருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நந்தி கோவில், ஒரு குன்றின்மேல் அமைந்துள்ளது.

    முன்னொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்தப் பிரதேசத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டதாம். ஒரு மாடு கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தவே விவசாயிகள் அந்த மாட்டைத் தடியால் அடித்துத் தாக்கினர்.

    அங்கேயே காலை மடக்கி அமர்ந்த மாடு, அமர்ந்தபடியே கல்லாகி விட்டதாம். அத்துடன் நில்லாமல் அந்தக் கல் சிலை எல்லோரும் பார்த்திருக்கும்போதே கிடுகிடுவென வளரவும் தொடங்கியதாம்.

    செய்வதறியாத மக்கள் அச்சத்தோடு சிவனை வணங்கித் துதிக்க, வானில் ஓர் அசரீரி ஒலித்தது. நந்தியின் காலடியில் உள்ள திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் சற்றுநேரம் வைக்குமாறு சொல்லிற்று அசரீரி.

    அசரீரியின் கட்டளைப்படிச் செய்யவே சிலையின் வளர்ச்சி நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக மக்கள் அங்கே அந்த நந்திக்குக் கோவில் அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோவிலின் தல வரலாறு.

    சைவ சமயத்தில் முதல் குருவாக விளங்குபவர் சிவனின் வாகனமான நந்தி தேவர். சிவாலயங்களில் சிவ சன்னிதியின் முன் சிவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் இவரைச் சித்தர் என்றும் கூறுவதுண்டு.

    மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நந்தியின் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே நந்தி வழிபாடு என்பது பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை உடையது.

    சிவபெருமான் தாந்திரிக ஞானத்தைத் தம் மனைவியான பார்வதி தேவிக்குக் கற்பித்தார். அன்னை பார்வதியிடமிருந்து அந்த ஞானத்தைப் பெற்றார் நந்தி தேவர். அதைத் தன் சீடர்களுக்கு அவர் கற்பித்தார்.

    சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், திருமூலர், வியாக்ர பாதர், பதஞ்சலி ஆகியோரெல்லாம் நந்தி தேவரின் சீடர்கள். அந்தச் சீடர்கள் குருவின் கட்டளைப்படி தாந்திரிக ஞானத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் சென்று பரப்பினார்கள்.

    பிரதோஷ காலங்களில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் நந்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசித்தால் பக்தர்களின் தோஷமெல்லாம் விலகி அவர்கள் வாழ்வில் சந்தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

    நந்தி சிவலோகத்தின் தலைமைக் காவலர். சிவனைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களைத் தடுக்க நந்திக்கு அதிகாரம் உள்ளது. எனவே அவர் அதிகார நந்தி எனவும் பெயர் பெறுகிறார்.

    பார்வையாளர்களைத் தடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆலயங்களைக் காக்கும் அதிகாரமும் நந்தி தேவருக்கே உரியது.

    அதனால்தான் திருக்கோவில் மதில் சுவர்களில் நான்கு புறங்களிலும் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

    சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் ஆயலத்தில் பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் உள்ளது. தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி தான் அந்த நந்தி வாகனத்தைச் செய்து கொடுத்தவர்.

    தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம் போன்ற பல சாஸ்திரங்களைத் தோற்றுவித்தவர் நந்தி தேவர்தான். இவரை நந்திகேசுவரர் என்ற முனிவராகவும் கருதுவதுண்டு.

    நடனக்கலையில் விருப்பமுள்ளோரும் இசை பயில்வோரும் நந்திதேவனை வழிபட்டால் கலைகளில் சிறந்தோங்க முடியும்.

    நந்திமலை எனப் பெயர்பெற்ற ஒரு மலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நந்தி கோவில் இந்த மலையில் உண்டு.

    நந்தி மத்தளம் வாசிப்பதில் கை தேர்ந்தவர். நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ் மீட்ட சிவபெருமான் நடனமாடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    சிவபெருமானின் வாகனம் நந்தி என்பது மட்டுமல்ல, சிவனது கொடியில் காட்சி தருபவரும் நந்திதான்.

    தஞ்சைப் பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அதில் ஒட்டுவேலை எதுவும் கிடையாது.

    ராமாயணத்தில் வரும் அனுமன் நந்திகேஸ்வரரின் அவதாரமே என்ற கருத்தும் உண்டு.

    மதுரையில் ஆவணி மூல வீதியில் மாக்காளை என்று சொல்லப்படும் சுதையால் அமைந்த பிரமாண்டமான நந்தி சிலை ஒன்று உண்டு. இத்தகைய நந்தியை சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் தரிசிக்கலாம்.

    வாகனமான நந்தி வேறு. வாகனத்தில் அமரும் சிவன் வேறு என நாம் பொதுவாக நினைப்போம். அந்தக் கருத்து அவ்வளவு சரியல்ல.

    தானும் நந்தியும் வெவ்வேறல்ல, ஒருவரே என சிவபெருமான் நந்தி புராணத்தில் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறார்.

    எனவே நந்தியை வணங்குவது என்பது சிவபெருமானை வணங்குவதே ஆகும்.

    நம் முன்னேற்றத்தில் நேரும் தடைகளை யெல்லாம் விலக்கும் நந்திதேவரை வணங்கி நந்தி அருளையும் சிவன் அருளையும் ஒருசேரப் பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×