தங்கள் மீதான அழுத்தத்தை சுமையாக உணரக் கூடாது: தவான், அபிநவ்-க்கு கோலி அறிவுரை

இலங்கை தொடரில் தங்கள் மீதான அழுத்தத்தை சுமையாக உணரக் கூடாது என்று ஷிகர் தவான் மற்றும் அபிநவ் ஆகியோருக்கு கோலி அறிவுரை கூறியுள்ளார்.
தங்கள் மீதான அழுத்தத்தை சுமையாக உணரக் கூடாது: தவான், அபிநவ்-க்கு கோலி அறிவுரை
Published on

இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 26-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும்போது தொடக்க வீரர் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். இதனால் முரளி விஜயும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆபரேசன் செய்த கையில் இன்னும் வலி இருப்பதாக முரளி விஜய் கூறியதால், முழு உடற்தகுதி பெறவில்லை என்று பிசிசிஐ மெடிக்கல் குழு அறிவித்தது.

இதனால் அவருக்குப் பதிலாக தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் மற்றொரு தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் இடம்பிடித்துள்ளார். ஆகையால் லோகேஷ் ராகுல் உடன் தவான் அல்லது அபிநவ் முகுந்த் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரர்களாக களம் இறங்க உள்ளனர்.

இன்று இலங்கை சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தவான் அல்லது அபிநவ் முகுந்த் தங்களின் அழுத்தத்தை சுமையாக உணரக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றுதான் அணிக்கு வருகிறார்கள். துரதிருஷ்டவசமாக வீரர்களுக்கு காயம் ஏற்படுவது விளையாட்டின் ஒரு பகுதி. விஜய் தனது காயத்தில் இருந்து மீண்டு ஒரு போட்டியில் விளையாடினார். அவர் போட்டிக்கு உடற்தகுதி பெறவில்லை என்று தேர்வாளர்கள் கூறினார்கள். தற்போது இதுபோன்ற கலாச்சாரம் உருவாகி வருகிறது. வீரர்கள் உண்மையாக இருக்கிறார்கள்.

அபிநவ் முகுந்த் அணியில் உள்ளார். அவர் ஏராளமான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இலங்கை தொடரின்போது தவான் சதம் அடித்துள்ளார். பின்னர் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

தரம்சாலா போட்டியில் புஜாரா தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆகவே, இந்திய அணி வீரர்கள் அழுத்தத்திற்கு கீழ் உள்ளோம் என்பதை விட இந்த சூழ்நிலையை வாய்ப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த நோக்கத்துடன்தான் செல்வார்கள் என்பது உறுதி’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com