பஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தில் விபரீதம் - ரெயில் மோதி 50 பேர் பலி

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே இன்று ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். #Dussehra #Amritsar #TrainAccident
பஞ்சாப்பில் தசரா கொண்டாட்டத்தில் விபரீதம் - ரெயில் மோதி  50 பேர் பலி
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின்  தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமிர்தசரஸ் நகர துணை மாஜிஸ்திரேட் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த அசம்பாவிதத்துக்கு தசரா விழா குழுவினரின் அஜாக்கிரதையே காரணம் என கூறப்படுகிறது. அந்த பகுதியை கடந்துபோகும் போது ரெயிலின் வேகத்தை குறைக்குமாறு அவர்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது, ரெயில் வரும் நேரம் தொடர்பாக அங்கு குழுமி இருந்த மக்களிடம் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்திருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.

இந்த விழாவை காங்கிரஸ் கட்சியினர்தான் நடத்தினார்கள். நவ்ஜோத் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மக்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தும்கூட அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். எனவே, இந்த விபத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என இன்னொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சுமார் 50 உயிர்களை பறித்த இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Dussehra #Amritsar #TrainAccident

X

Maalai Malar
www.maalaimalar.com