

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. போராட்டங்களும் நடைபெறுகின்றன. சில இடங்களில், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாட்டிறைச்சி திருவிழாவும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் எனப்படும் அம்மாநில அரசின் விருந்தினர் இல்லத்தில் இன்று மாட்டிறைச்சி திருவிழா நடத்த அரசியல் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி டெல்லி காவல் துணை கமிஷனர் பி.கே.சிங் கூறுகையில், ‘கேரளா ஹவுசில் இன்று மாலை மாட்டிறைச்சி திருவிழா நடத்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் எங்களுக்கு வந்தது. அதனால், அவர்களை தடுத்து நிறுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.