அவினாசியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதல்: கணவர் கண் எதிரே பெண் பலி

அவினாசியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே பெண் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து
விபத்து
Published on

அவினாசி:

அவினாசியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே பெண் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நல்லூர் வினோபா நகரைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 57). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜாமணி (48). இவர் அம்மாபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் சமையல் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ராஜூ தனது ஸ்கூட்டரில் மனைவி ராஜாமணியுடன் வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவினாசி வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி சந்திப்பு அருகே வந்த போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ராஜூ ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே ராஜாமணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ராஜூ லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com