

புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் தீபன்ராஜ் (வயது17). இவர் கருவடிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்றுமாலை வகுப்பு முடிந்ததும் தீபன்ராஜ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மற்ற மாணவர்களுடன் பேஸ்கட் பால் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது தீபன்ராஜ் மயங்கி விழுந்தார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் தீபன்ராஜை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தீபன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முனுசாமிக்கு தீபன்ராஜ், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகனான கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் படிக்கட்டில் தவறி விழுந்து இறந்து விட்டார். தற்போது தீபன்ராஜூம் மயங்கி விழுந்து இறந்து போனதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews