

மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.
எனவே, “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து சுதந்திரமான எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களும் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.