

புதுடெல்லி:
வேலைவாய்ப்பை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும், 18 வயது நிரம்பிய ஒருவருக்கு கட்டாய வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும், இல்லையெனில், அதற்கேற்ப உதவித்தொகையை அரசு அளிக்க வேண்டும் என்ற அம்சங்கள் கொண்ட தனிநபர் மசோதாவை சமாஜ்வாதி உறுப்பினர் விஷாம்பர் பிரசாத் நிஷாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் மசோதா விவாதிக்கப்பட்ட போது 40 பேர் மட்டுமே உள்ளே அமர்ந்திருந்தனர். மசோதா தொடர்பாக விஷாம்பர் பிரசாத் நிஷாத் பேசும் போது, “இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், போதிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் கிரிமினல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது தடுக்கப்படும்” என்று கூறினார்.
இம்மசோதாவை சமாஜ்வாதி, அதிமுக, இடதுசாரி எம்.பி.க்கள் வரவேற்று பேசிய அதே நேரத்தில், ஆளும் பா.ஜ.க எம்.பி.க்கள் எதிர்த்தனர்.
இதனையடுத்து பேசிய, தொழிலாளர் துறை மந்திரி சந்தோஷ் கங்வார், “வேலைவாய்பின்மை ஒரு அடிப்படை உரிமையாக இல்லை என்ற போதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே, மசோதாவை உறுப்பினர் திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.
ஆனால், விஷாம்பர் பிரசாத் நிஷாத் மசோதாவை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதனையடுத்து, துணை சபாநாயகர் மசோதாவை வாக்கெடுப்புக்கு விட்டார். 21 உறுப்பினர்கள் எதிராகவும், 18 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக மசோதா தோல்வியடைந்தது.
பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா என்பது அதிர்ஷ்டவசமாகதான் வாக்கெடுப்புக்கு எடுக்கப்படும். கடந்த ஆண்டு திமுக எம்.பி திருச்சி சிவா கொண்டு வந்த திருநங்கைகள் நல உரிமை தனிநபர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது நினைவு கூறத்தக்கது.