ஓமலூர் அருகே வழித்தட தகராறில் பெண் அடித்துக்கொலை- 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ஓமலூர் அருகே வழித்தட தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

ஓமலூர்:

ஓமலூர் அருகே வழித்தட தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோட்டமேடு சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சென்னிமலை. விவசாயி. இவருடைய மனைவி மல்லியம்மாள் (வயது 55). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (60) என்பவருக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வழித்தடம் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், மகன்கள் அசோகன் (40), விஜயன் (32), பொன்னுவேல் (28) ஆகிய 5 பேரும் சேர்ந்து மல்லியம்மாளை அடித்து உதைத்து கீழே தள்ளி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மல்லியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெண்ணை அடித்துக்கொன்ற கிருஷ்ணன், அசோகன், விஜயன், பொன்னுவேல், ரஞ்சிதம் ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com