வேலையின் கடைசி நாளில் ஊழியரின் சேட்டையால் காணாமல் போன டிரம்ப் ட்விட்டர் கணக்கு

ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் தனது கடைசி வேலை நாளில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை செயலிழக்க வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வேலையின் கடைசி நாளில் ஊழியரின் சேட்டையால் காணாமல் போன டிரம்ப் ட்விட்டர் கணக்கு
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபருக்கென பிரத்யேக ட்விட்டர் கணக்கு வெள்ளை மாளிகையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அதிபராக பதவியேற்ற பின்னரும் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த ட்விட்டர் கணக்கை தொடர்ந்து வருகிறார். தனது சகாக்களுடன் எடுக்கும் முடிவுகள், கருத்துக்கள் என சகலத்தையும் சொந்த ட்விட்டர் கணக்கு வழியாகவே தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 6.45 அளவில் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மாயமானது. அவரது ட்விட்டர் பக்கத்திற்கு சென்றால், ‘மன்னிக்கவும், அந்த பக்கம் இப்போது இல்லை’ என்ற செய்தி வந்துள்ளது. சில மணிநேரத்திற்கு பின்னர் அவரது ட்விட்டர் பக்கம் மீண்டும் வழக்கம் போல இயங்கினாலும், இந்த நிகழ்வுக்கான பின்னணி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர் தனது வேலையை விட முடிவு செய்து, கடைசி நாளாக நேற்று பணிக்கு வந்துள்ளார். கடைசி நாளின் வேலையில், டிரம்பின் ட்விட்டர் கணக்கை அவர் நீக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் இருந்து தகவல் வந்ததும் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாடுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கை நிர்வகிப்பது யார்? என்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவரது கணக்கு நிர்வகிக்கப்படுகிறதா? என்ற கேள்விகளை அங்குள்ள ஊடகங்கள் எழுப்பியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com