போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னையில் நேற்று கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அஸ்வினியின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்
Published on

சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நடந்த அந்த கொலை சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல் இப்போது கல்லூரி அருகிலேயே மாணவியை காதலன் தீர்த்து கட்டிய சம்பவமும் பெற்றோர்கள் மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில் காதல் வலையில் சிக்கிய அஸ்வினி, பின்னர் அதில் இருந்து விடுபெற முயற்சித்துள்ளார். குடும்ப சூழ்நிலை, தாயின் அறிவுரையை ஏற்று காதலனுடன் உள்ள உறவை துண்டிக்கவே ஆத்திரம் அடைந்த காதலன் அழகேசன் இந்த கொடூர செயலை செய்ய துணிந்தார்.

தனது அன்பை உதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாது வெறுத்து ஒதுக்கியதால் அஸ்வினியை கொடூரமாக கொன்றார்.

மகளின் உடலை பார்த்து தாய் சங்கரி கதறி அழுது துடித்தது நெஞ்சை உறைய வைத்தது. “பொத்தி பொத்தி” வளர்த்த என் மகளை அநியாயமாக கொன்று விட்டானே என்று தாய் கதறி துடித்தார். அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய மகளை பறிகொடுத்து விட்டேனே? மனம் திருந்திய மகளுக்கு மரணம் தான் முடிவா? என்று கதறினார்.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள், சக மாணவிகள் அங்கு வந்திருந்தனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அஸ்வினி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்வினி படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், மகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருகிறார்கள்.

பிரேத பரிசோதனை நடந்த இடத்திற்கு கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமி‌ஷனர் ராஜேந்திரன் வந்தார். அவரிடம் சங்கரியும், அவரது உறவினர்களும் சென்று கதறி அழுதனர்.

என் மகள் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மகளை கொன்றவருக்கு கடுமையான தண்டனை வாங்கி தாருங்கள் என்று சங்கரி கதறி அழுதார்.

அழகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் அஸ்வினி உடலை பெற்றுக் கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com