

புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் மரியாள் நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், ஒதியஞ்சாலை பகுதியை சேர்ந்த சீசர் ஆபேல் என்பவரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.30 ஆயிரத்தை அந்தோணிசாமி திருப்பி கொடுத்து விட்டார்.
குடும்ப சூழ்நிலையால் மீதி பணத்தை அந்தோணி சாமியால் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அந்தோணிசாமி ரெட்டியார்பாளையம்- வில்லியனூர் மெயின் ரோட்டில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சீசர் ஆபேலிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் ஏன் திருப்பி கொடுக்கவில்லை? என கேட்டு அந்தோணிசாமியை தாக்கினர்.
அதோடு அவரின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். மேலும் வட்டி பணத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து அந்தோணி சாமி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சீசர் ஆபேல் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.