ராஜஸ்தானில் மோடி கூட்டத்துக்கு மக்களை திரட்ட ரூ.7 கோடி செலவு

ராஜஸ்தானில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு மக்களை திரட்டுவதற்காக மாநில அரசு 7 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தானில் மோடி கூட்டத்துக்கு மக்களை திரட்ட ரூ.7 கோடி செலவு
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் பயன் அடைந்து இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையொட்டி தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஏற்பாடு செய்துள்ளார். இந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் நடக்கும் அமருதன் கா பார்க் மைதானம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி பேசும் கூட்டத்துக்காக ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை அழைத்து வரும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. சுமார் 3 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்ற இலக்குடன் அந்த பணி நடந்தது.

சுமார் 5600 பஸ்கள் மூலம் அவர்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக ராஜஸ்தான் மாநில அரசு 7 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு கிலோ மீட்டருக்கு தலா ரூ.20 உதவி வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த செலவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் பணம் இப்படி செலவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. #PMModi

X

Maalai Malar
www.maalaimalar.com