

நியூயார்க்:
உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் கைலாஷ் சத்யாத்ரி. இவர் பெயரில் குழந்தைகளுக்கான அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் நாடு முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கைலாஷ் சத்யாத்ரி குழந்தைகள் அறக்கட்டளையை சேர்ந்த பயல் ஜன்ஹித் என்ற 17 வயது நிரம்பிய சிறுமிக்கு உலக புகழ் பெற்ற அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் சார்பில் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுமி பயல் ஜன்ஹித் தனது ஹின்ஸ்லா கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குழந்தை திருமணத்தை ஒழித்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது கடுமையான முயற்சியின் மூலம் ஹின்ஸ்லா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குழந்தை திருமணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
பயல் ஜன்ஹித்தின் இந்த செயலை அங்கீகாரம் அளிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப்பட்டது.