தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம்

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி கூறினார்.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் கடும் வெயிலின் தாக்கம் குறைந்தது.

இடி-மின்னலுடன் மழை பெய்ததால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேர் பலியாகி விட்டனர். கொரும்பாக்கத்தில் 40 ஆடுகள் பலியாகி விட்டன. ஏராளமான வாழை, பப்பாளி மரங்களும் பல இடங்களில் சேதமானது.

இந்த நிலையில் இன்றும் மழை பெய்வதற்கான அறிகுறி காணப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வறண்டு கிடந்த ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடும் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் வெப்பசலனம் வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் சூழல் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆந்திராவையொட்டி உள்ள மேற்கு மத்திய வங்கக்கடல், கேரளாவை யொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் புழல் ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியில் தற்போது 2,958 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியில் 1,956 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கோடை மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com