

சென்னை:
சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘ரெயில்-18’, ‘ரெயில்-20’ ஆகிய பெயரில் ‘வை-பை’, ஜி.பி.எஸ். கருவி, தானியங்கி கதவுகள் உள்பட உலக தரம் வாய்ந்த நவீன சொகுசு வசதியுடன் கூடிய ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் ‘ரெயில்-18’ திட்டத்தில் தயாரிக்கப்படும் 2 ரெயில்களை வடிவமைப்பு செய்யும் பணி நிறைவடைந்து விட்டது. இந்த ரெயில்கள் நகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரெயிலாக இயக்கப்பட்டு வரும் சதாப்தி ரெயிலுக்கு பதிலாக இயக்கப்படலாம் என்று தெரிகிறது.
‘ரெயில்-20’ என்ற திட்டத்தில் தயாரிக்கப்படும் ரெயில்கள் 2020-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் ராஜ்தானி ரெயில்களுக்கு மாற்றாக இயக்கப்படலாம் என்று தெரிகிறது. சதாப்தி, ராஜ்தானி ரெயில்கள் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் படைத்தவை. ஆனால் வேக கட்டுப்பாடு காரணமாக தற்போது சராசரியாக 90 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஆனால் ‘ரெயில்-18’, ‘ரெயில்-20’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ரெயில்கள் 130 கி.மீ. வேகத்தில் சராசரியாக செல்லும். இதனால் பயண நேரம் 20 சதவீதம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. சதாப்தி, ராஜ்தானி ரெயில்களுக்கு பதிலாக அதிநவீன வசதிகளுடன் உலக தரம் வாய்ந்த புதிய அதிவேக ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், வருகிற ஜூன் மாதம் ‘ரெயில்-18’ திட்டத்தில் தயாரிக்கப்படும் 16 பெட்டிகளை உடைய 2 ரெயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews