புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம்
Published on

புதுக்கோட்டை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் புதுக்கோட்டை நகர பா.ஜ.க. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த, அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாலையில் நகர பா.ஜ.க. சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், நகர பொது செயலாளர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள் மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் வணிகர் சங்க தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒருமணி நேரம் கடைகளை அடைத்து கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் சேதுபதி தலைமையில் அக்கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஆலங்குடியில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கறம்பக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதேபோல கந்தர்வகோட்டையில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கார்த்திக்கேயன் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com