இறந்த நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பொதுமக்கள்

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் இறந்த பிரவுனி என்ற நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து பொதுமக்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இறந்த நாய்க்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர்
இறந்த நாய்க்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர்
Published on

ஈரோடு:

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பிரவுனி என்கிற வெள்ளையன் என்ற ஆண் நாயை செல்லமாக வளர்த்து வந்தனர். பிரவுனி எஸ்.கே.சி. ரோடு முழுவதும் சுற்றித்திரிந்து அந்த பகுதி மக்களை பாதுகாத்து வந்ததோடு மிகவும் பாசமாகவும் இருந்துள்ளது. அந்த நாய்க்கு பொதுமக்கள் தினமும் உணவு வழங்கி வந்தனர்.

இவ்வாறு செல்லமாக வளர்ந்த அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் இறந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எஸ்.கே.சி. ரோட்டில் இறந்த பிரவுனிக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘பிரவுனி நாய் எங்கள் பகுதியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தது. இரவு நேரத்தில் எங்கள் பகுதி முழுவதும் சுற்றி வந்து எங்களை பாதுகாத்து வந்தது. பிரவுனியால் எங்களுக்கு எந்த தொந்தரவும் வந்ததில்லை. எங்கள் பகுதி மக்கள் அனைவரது முகத்தையும் நன்கு அடையாளம் தெரிந்து வைத்திருந்தது. வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்தால் குரைத்து விரட்டி விடும். பிரவுனி இறந்தது எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று உள்ளது’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com