நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் தவறி விழுந்து மரணம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் பலகையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் தவறி விழுந்து மரணம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அலுவலகத்தில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார். இங்கு சுமார் 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர் மாலை அணிவித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பலகையில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தலையில் பலத்த காயமடைந்த அவரை சக அர்ச்சகர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கோவில் கருவறைக்குள் வெங்கடேசன் தவறி விழுந்ததால், நேற்று ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் தூய்மை செய்யப்பட்டு, அர்ச்சகர்கள் மூலம் கலசங்கள் வைத்து பரிகார பூஜை செய்யப்பட்டது. பின்னர் புண்ணியாவாசனம் நடந்தது. இதையடுத்து தினசரி நடைபெறும் பூஜைகள் தொடங்கியது. பக்தர்களும் சாமியை வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com