

புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி 50 கோடி மக்களுக்காக நல்வாழ்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். லாபத்திற்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைமையில் பா.ஜ.க.வுக்கு இல்லை.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. பா.ஜ.க. கூட்டணிக்காக தனது கொள்கையை மாற்றி கொள்ளாது. கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தக்கூடிய நிலையில் இல்லை.
கடந்த மாதம் இந்தியா வந்த ராஜபக்சே 2009 போரின் போது காங்கிரஸ், தி.மு.க. அரசுதான் எங்களுக்கு உதவி செய்தது என்று கூறி அப்ரூவராக மாறி உள்ளார். இதற்கு தி.மு.க. - காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.